விடுதலை இசை வெளியீட்டு விழாவில் கோபமடைந்த இளையராஜா |Ilaiyaraaja was angry at the launch of the Viduthalai music
விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நேற்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இந்த விழாவில் பேசிய இளையராஜா, இந்த திரைப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத ஒரு களத்தில் நடக்கும் கதையாக இருக்கும், வெற்றிமாறன் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதையாக இருக்கும். கடல் அலையாக வந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அலையும் வேறு வேறு அலையாகவே இருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படத்தில் இதுவரை கேட்காத இசையை நீங்கள் கேட்பீர்கள் என்றதும், அங்கிருந்த ரசிகர்கள் விசில் அடித்தும், கத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து ரசிகர்கள் கத்திக்கொண்டே இருந்ததால், கோபமடைந்த இளையராஜா, நீங்கள் இப்படி கத்திக்கொண்டே இருந்தால் எப்படி என்றார், அப்போது சில ரசிகர்கள் கத்தியதால், கத்தாதே…மைக்கை கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன் என்றார். இதையடுத்து,ரசிகர்கள் அமைதி அடைந்தனர். அதன் பின் இளையராஜா விடுதலை படத்தில் வரும் பாடலை பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்தார்.